பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விரதங்களில், வரலட்சுமி விரதம் ரொம்ப முக்கியமான விரதம். வரங்களை அள்ளிக் குடுக்கும் தெய்வங்களில் மகாலட்சுமிக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்த விரதத்தை கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் கடைபிடிக்கலாம். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் வரலட்சுமி விரதம் செய்தால் அவர்களுடைய மாங்கல்யம் பலமாக இருக்கும், விரதம் கடைபிடிக்கும் பெண்களின் கனவருடைய ஆயுள் அதிகரிக்கும். முக்கியமாக வீட்டில் சகல சௌபாக்கியம் பெற்று சந்தோஷமாக இருப்பார்கள்.
இவ்வளவு அற்புதமான வரலட்சுமி நோம்பு 2022 ம் ஆண்டில் எப்போது வருகிறது, பூஜை எந்த நேரத்தில் செய்தால் நல்லது, எளிய முறையில் இந்த விரதத்தை எவ்வாறு கடைபிடிக்கலாம், நோம்பு சரடுக்கான நல்ல நேரம் என்ன என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இந்த வருடம் 2022 ல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (05.08.2022) அன்று வரலட்சுமி விரதம் வருகிறது.
எளிமையான முறையில் எவ்வாறு கடைபிடிக்கலாம் என்று பார்க்கலாம். விரதத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து, விரதம் அன்று அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து சுத்தமாக ஆன பிறகு பூஜை அறைக்கு சென்று விநாயகரை வழி பட வேண்டும். எந்த நல்ல காரியங்கள் ஆரம்பிக்கும் போதும் முதலில் விநாயகரை வழிபட்டால் அந்த காரியம் சிறப்பாக எந்த விதமான தடங்களும் இல்லாமல் சிறப்பாக முடியும் என்பது ஐதீகம்.
பிறகு பித்தளை, வெள்ளி, செம்பு என்று இதில் எந்த உலோகத்தால் ஆன செம்பு உங்கள் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை அந்த செம்பு எடுத்துக்கொண்டு, அந்த செம்பில் தண்ணீர் அல்லது பச்சை அரிசி எடுத்து செம்பில் நிரப்ப வேண்டும்.
தண்ணீர் ஊற்றுபவர்கள் அதனுள் மஞ்சள், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள், வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி நிரப்பி வைக்க வேண்டும் என்றால் அரிசியுடன் ஒரு சிறிய அளவிலான பொட்டலத்தில் பருப்பு போட்டு வைக்க வேண்டும். அவற்றுடன் ஒரு ரூபாய் நாணயம், எலுமிச்சைபழம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கு, பூ, கருகமணி ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும்.
பின்னர் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து நடுவே கலசத்தின் மீது தேங்காயை மஞ்சள் தடவி குங்குமம் பொட்டு வைத்து மகாலட்சுமியின் முகமாக ஆவாகனம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் திருமுகம் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. வாங்கி அழகாக அலங்கரித்து கொள்ளலாம். மகாலட்சுமிக்கு பட்டு பாவாடை அல்லது பட்டு புடவை, ரவிக்கை போன்றவற்றால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பம் போல கம்மல் மாட்டுவது, வளையல் போடுவது, சவுரி முடி தரிப்பது போன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த அளவிற்கு அழகாக மகாலட்சுமியை உருவகப்படுத்த முடியுமோ! அந்த அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கலசம் அமைப்பவர்கள் கலசத்தை தயார் செய்து அதனை ஒரு மனையின் மீது அமர்த்த வேண்டும். மனையை அலங்கரித்து மஞ்சள் தடவி கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது வாழை இலை விரித்து நெல்மணி அல்லது பச்சரிசி பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது கலசம் அல்லது நீங்கள் தயார் செய்த மகாலட்சுமியின் படம் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். மனையுடன் அப்படியே கொண்டு போய் வெளியில் வாசற்படியில் வைக்க வேண்டும். முந்தைய நாள் மகாலட்சுமியை அழைப்பதாக இருந்தால் வியாழன் கிழமை அன்று மாலை அலங்காரம் செய்து வாசலில் ஒரு கற்பூரம் ஏற்றி மகாலட்சுமியை எழுந்தருளும்படி உங்களுக்கு தெரிந்த முறையில் ஆவாகனம் செய்யுங்கள்.
பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில் பூஜை செய்பவர்கள் 9:15 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளலாம். மாலையில் 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில் பூஜைகளை செய்வது நல்லது. பூஜையில் உங்களுக்கு விருப்பமான நைவேத்தியங்கள் படைக்கலாம். இட்லி, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பாயாசம், சித்திரன்னம் எனப்படும் கலவை சாத வகைகள் போன்றவற்றில் உங்களுக்கு பழக்கம் உள்ளதை செய்து வையுங்கள்.
பின்னர் 9 நூல் இலைகள் கொண்ட நோன்புசரடு வாங்கி பூ ஒன்றை கட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்யும் பொழுது தாம்பூலம் கொடுத்து வழியனுப்ப வேண்டும் எனவே தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றுடன் ரவிக்கை வைத்துக் குடுக்கும் போணு நல்ல பலனை தரும். பரம்பரையாக செய்து வருபவர்கள் வீட்டு பெண்களுக்கு புடவை வாங்கி வைத்துக் கொடுப்பது உண்டு. அப்போது தான் பூஜை நிறைவு பெறும்.
பிறகு நோம்பு கயிறு கட்டிக்கொள்ளலாம். நோம்பு கயிறு கட்டிக்கொள்ள நல்ல நேரம் காலை காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் காலை 10 மணி முதல் 10.30 வரை இந்த நேரத்தில் கட்டிக்கொள்ளலாம்.